இலங்கை - இந்திய கூட்டு இராணுவ பயிற்சி

இலங்கை - இந்திய கூட்டு இராணுவ பயிற்சி

by Staff Writer 09-10-2021 | 8:14 PM
Colombo (News 1st) இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி தற்போது அம்பாறையில் இடம்பெற்று வருகின்றது. இதில் செயன்முறை பயிற்சியொன்று நேற்று முன்தினம் அம்பாறை நகரில் நடைபெற்றது. பயங்கரவாதத்தை ஒழித்தலுக்கு மேலதிகமாக உள்நாட்டு கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சியும் இதன்போது வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்போது இந்திய பசுபிக் கடற்பரப்பில் பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த, ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்களான முரசாமே மற்றும் காகா ஆகியவை இந்திய கடற்படையுடனான கூட்டு பயிற்சிக்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து அரபிக் கடலுக்கு சென்றன. ஜிமிக்ஸ் டுவென்டி வன் என்றறியப்படுகின்ற இராணுவ போர் பயிற்சி நேற்று (08) நிறைவடைந்துள்ளது. ஜப்பானிய போர் கப்பல்கள், மலாக்கா கடல் பரப்பில் அமெரிக்காவுடனான போர் பயிற்சியை நிறைவுசெய்த பின்னரே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இதேவேளை, தென் சீனக்கடலில் அமெரிக்க கடற்படையின் பசுபிக் படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் இனந்தெரியாத பொருள் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் கடற்படையினர் 11 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீர்மூழ்கி கப்பலில் அணு ஆயுதம் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் நீர்மூழ்கி கப்பல் இயங்குவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென் சீனக்கடலில் சீனாவின் நடவடிக்கைகள் காரணமாக இந்திய பசுபிக் கடற்பரப்பில் நுழைவதற்கு அனுமதி கோரியுள்ள அமெரிக்கா உட்பட பல நாடுகள் அண்மைக் காலமாக வெவ்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, 2025 ஆம் ஆண்டளவில் சீனா தமது நாட்டை ஆக்கிரமிக்கும் என தாய்வான் தெரிவித்துள்ளது. ஆனாலும், அதற்கான விளைவுகளை சீனா அனுபவிக்க வேண்டும் என தாய்வானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.