ராகலை தீ விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்

by Staff Writer 08-10-2021 | 12:50 PM
Colombo (News 1st) ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு (07) சுமார் 11 மணியளவில் வீட்டில் தீப்பற்றியுள்ளதுடன் இன்று காலை வேளையாகும் போது வீடு முற்றாக சாம்பராகியிருந்தது. இளைய மகனின் முதலாவது பிறந்த நாளுக்காக வீட்டில் சிறியதொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் வீடு தீப்பற்றி எரிவதை அயலவர்கள் கண்டுள்ளதுடன் அதனை அணைப்பதற்கு அவர்கள் முயன்ற போதிலும் அது கைகூடவில்லை. முதலாவது பிறந்தநாளை நேற்று (07) கொண்டாடிய மோகன் நிரோஷன், 11 வயதான அவரது சகோதரன், 34 வயதான தாய், 60 மற்றும் 55 வயதான தாயின் பெற்றோர் என ஐவர் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிள்ளையின் தந்தை தனியாக வசிப்பதுடன் சம்பவம் இடம்பெற்ற வேளையிலும் வீட்டில் இருக்கவில்லை. வீடு தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.