தீ விபத்தில் முடிந்த கணவன் - மனைவி தகராறு

by Staff Writer 08-10-2021 | 9:14 PM
Colombo (News 1st) குடும்பத் தகராறு வலுத்ததையடுத்து, தீக்காயங்களுடன் பெண்ணொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் மல்லாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - மல்வாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன் குளம் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 22 வயதாவதுடன் அவரது கணவருக்கு 25 வயதாகின்றது. இவர்களுக்கு இரண்டரை வயதுடைய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதுடன் பின்பு இந்த தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது. மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண்ணின் கணவர் கடந்த 05 ஆம் திகதி மல்லாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.