ஜனாதிபதி கரம் நீட்டியுள்ளார், சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் - குமரன் பத்மநாதன்

by Staff Writer 08-10-2021 | 8:09 PM
Colombo (News 1st) கிளிநொச்சியில் இன்று (08) நடைபெற்ற நிகழ்வொன்றில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கலந்துகொண்டிருந்தார். LTTE அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக குமரன் பத்மநாதன் செயற்பட்டிருந்தார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி - செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கலந்துகொண்டிருந்தார். புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பு தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜனாதிபதியின் தூர நோக்கு தான் இது. அதனை வரவேற்பது தமிழர்களாகிய தமது பொறுப்பு எனவும் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் எனவும் கூறிய அவர், இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்றார். அத்தோடு இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் வழங்கியிருக்கவில்லை எனவும் நாளாந்த செலவிற்கு தான் பணம் வழங்கியிருந்ததாகவும் குமரன் பத்மநாதன் இதன்போது தெரிவித்தார்.