தாய்வானுக்கு போர் அச்சுறுத்தல் விடுக்கும் சீனா

சுயமாக உயர முயலும் தாய்வான்: போர் அச்சுறுத்தல் விடுக்கும் சீனா 

by Bella Dalima 06-10-2021 | 8:08 PM
Colombo (News 1st) பொருளாதார பலமுள்ள சுயாதீன நாடாகத் திகழும் தாய்வான் 40 வருடங்களாக எதிர்கொள்ளும் பகை தற்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. தாய்வான் சீனாவிற்கு அருகிலிருந்த ஒரு தீவு தேசமாகும். தற்போது தனி நாடாக திகழ்ந்தாலும் தாய்வானை தமது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. 1949 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் வெற்றியின் பின்னர் சீனாவிலிருந்து சுமார் இரண்டு மில்லியன் பேர் தாய்வானுக்கு தப்பியோடினர். அன்று முதல் 1971 ஆம் ஆண்டு வரை, தாய்வானை சீனாவாகவே ஐக்கிய நாடுகள் சபை கருதியது. 23 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தாய்வான், உலகில் 48 ஆவது பெரிய நாடாகும். தாய்வான் ஒரு பொருளாதார பலம் கொண்ட நாடு என்பதுடன், மொத்த தேசிய வருமானத்தில் சிறந்த நிலையிலுள்ள 30 நாடுகளில் தாய்வானும் அடங்குகின்றது. பெருந்தெருக்கள், சுரங்க ரயில் பாதை, துறைமுகம் என பொருளாதாரத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள தாய்வான் இப்போது சர்ச்சையை எதிர்நோக்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் சீனாவின் 149 போர் விமானங்கள் தாய்லவான் வான் பரப்பில் பறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2025 ஆம் ஆண்டாகும் போது தாய்வான் சீனாவின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் செல்லும் அபாயம் உள்ளதாக, தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் சியூ குஓ செங் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், சுதந்திர நாடாகத் திகழ முயற்சித்தால், போர் அறிவிப்பை வௌியிடுவதற்கு பின்வாங்கப்போவதில்லை என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.