by Bella Dalima 06-10-2021 | 9:03 PM
Colombo (News 1st) சர்வதேச உறுதிப்பாடுகளை திறம்பட செயல்படுத்தினால் தான் ஐரோப்பிய ஒன்றிய சந்தையை சலுகை அடிப்படையில் அணுகும் அடித்தளம் இலங்கைக்கு கிடைக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
GSP+ தொடர்பில் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இலங்கையில் இருந்த 10 நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக இலங்கை வழங்கிய உறுதிமொழி தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இவர்களது அறிக்கைக்கு அமையவே இலங்கைக்கான GSP+ வரிச்சலுகை தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.