ஆட்கடத்தல்: 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

இந்திய - இலங்கை கடல் எல்லையில் ஆட்கடத்தல் மோசடி; 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

by Staff Writer 06-10-2021 | 4:10 PM
Colombo (News 1st) இந்திய - இலங்கை கடல் எல்லையில் ஆட்கடத்தல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 பேருக்கு எதிராக இந்தியாவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. NIA எனப்படும் தேசிய விசாரணை முகவர் நிலையத்தினால் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடமொன்று செய்தி வௌியிட்டுள்ளது. திட்டமிட்ட சர்வதேச கடத்தல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேருக்கு எதிராக, மெங்களூர் விசேட நீதிமன்றத்தில் நேற்று இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை பிரஜைகளை இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தங்க வைத்து, கனடாவிற்கு அனுப்புவதாகத் தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி விடுதிகளில் தங்கியிருந்த 25 இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் மேலும் 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நான்கு கட்டங்களில் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டமை விசாரணையில் தெரியவந்தது. இந்த 38 இலங்கையர்களிடமிருந்தும் கனடாவிற்கு அழைத்துச்செல்வதாக தெரிவித்து மூன்றரை தொடக்கம் 10 இலட்சம் ரூபா வரை பெறப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாகியுள்ள இலங்கையரான ஈசன் என்பராலும் இலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள அவரது தரப்பினராலும் 1.83 கோடி ரூபா இவ்வாறு அறவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.