பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

by Bella Dalima 06-10-2021 | 10:44 AM
Colombo (News 1st) பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்ததாக, ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் இதனை உறுதிப்படுத்தினார். நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே, பண்டோரா ​பேப்பர்ஸில் தமது பெயர் வௌியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.