லொஹான் ரத்வத்தேக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள 8 கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு 

by Bella Dalima 05-10-2021 | 12:53 PM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள 8 கைதிகளுக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு ஆலோசனையளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. கடந்த 12 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவினால் அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் சூரியபாலன் உள்ளிட்ட 8 கைதிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கடந்த 12 ஆம் திகதி மாலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு வருகை தந்து, தாம் உள்ளிட்ட சில கைதிகளை சிறைக்கூடத்தில் இருந்து வௌியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்தமையினூடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் எஸ். துரைராஜா உள்ளிட்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்டன. மனுக்கள் தொடர்பிலான எழுத்துமூல ஆட்சேபனையை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதி தரப்பு மற்றும் மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதியரசர் குழாம், வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, நீதியமைச்சர் அலி சப்ரி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.ஆர். அஜித் உள்ளிட்டோர் வழக்கின் பிரதிவாதிகளாவர்.