ஆசிரியர் தினத்தில் வீதியில் இறங்கி போராட ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்

by Staff Writer 05-10-2021 | 8:16 PM
Colombo (News 1st) நாளை (06) ஆசிரியர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள 312 கோட்டக்கல்வி பணிமனைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. ''COVID தொற்று நிலைமைக்கு மத்தியில் கல்வியை மீட்கும் ஆசிரியர்'' என்பதே இம்முறை ஆசிரியர் தினத்திற்கான தொனிப்பொருளாகும். எனினும், ஆசிரியர்கள் தற்போது திருப்தியான மனநிலையில் இல்லை எனவும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை பாரதூரமான நிலைமையிலுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். அமைச்சரவையில் இதற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக அவர் கூறினார்.