சுன்னாகத்தில் கைதான மூவருக்கு விளக்கமறியல்

சுன்னாகத்தில் கைதான பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

by Bella Dalima 05-10-2021 | 11:40 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நேற்றிரவு யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர். சுன்னாகத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்களை கலைப்பதற்கு நேற்று முன்தினம் (03) வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் ​மேற்கொள்ளப்பட்டது. தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த கோப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நிறுத்தியுள்ளனர். போக்குவரத்து குற்றம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்ட போது, பிரதேச சபை உறுப்பினரின் சகோதரர் பொலிஸாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இதன்போது, குறித்த இடத்தில் பலர் குழுமியதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸாரால் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.