கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

வியாழேந்திரன் வீட்டின் முன்பாக இடம்பெற்ற கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

by Bella Dalima 04-10-2021 | 5:30 PM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் S.வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் A.C.ரிஸ்வான் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கில் ஒரேயொரு சாட்சியே மன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏனைய சாட்சியங்கள் தொடர்பில் எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனைய சாட்சியங்கள் தொடர்பிலான அறிக்கையை அடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு - மன்ரேசா வீதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் S.வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர், பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.