ஷாருக் கான் மகனுக்கு விளக்கமறியல்

போதைப்பொருள் விருந்து விவகாரம்: ஷாருக் கான் மகனுக்கு விளக்கமறியல்

by Bella Dalima 04-10-2021 | 7:54 PM
Colombo (News 1st) சொகுசு கப்பல் போதைப்பொருள் விருந்து விவகாரத்தில் சிக்கியுள்ள ஆர்யன் கானை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை நடத்த மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்று முன்தினம் (02) சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் விருந்து நடக்க இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, 25-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றுலா பயணிகள் போல அந்த கப்பலில் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடுக்கடல் அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விநியோகம் நடந்துள்ளது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக ஈடுபட்டு 2 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். அவர்கள் 8 பேரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சட்டப்பிரிவுகளின் கீழ் கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.