ஏப்ரல் 21 தாக்குதல்: நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

by Bella Dalima 04-10-2021 | 9:09 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 23, 270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டுள்ள வழக்கு தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா, நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதிவாதிகள் 25 பேருக்கும் எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், 15 ஆவது பிரதிவாதி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதால், ஏனைய 24 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இவர்களில் 12 பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகியதுடன், தமக்கு சார்பாக தமிழ் மொழி தெரிந்த சட்டத்தரணிகளை நியமிக்குமாறு ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.