அல்ஹாஜ் ஜுனைதா ஷெரீப் காலமானார்

எழுத்தாளரும் இலக்கியவாதியுமான அல்ஹாஜ் ஜுனைதா ஷெரீப் காலமானார்

by Bella Dalima 03-10-2021 | 10:17 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபரும் பிரபல எழுத்தாளரும் இலக்கியவாதியுமான காத்தான்குடியை சேர்ந்த அல்ஹாஜ் ஜுனைதா ஷெரீப் இன்று தனது 81 ஆம் வயதில் காலமானார். அல்ஹாஜ் ஜுனைதா ஷெரீப் வட கிழக்கு மாகாண ரீதியாக நான்கு சாகித்திய விருதுகள், இலங்கை அரசின் கலாபூசண விருது, இலக்கிய வித்தகர் விருது உட்பட பல விருதுகளை பெற்ற எழுத்தாளர் ஆவார். 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த அன்னார், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளராகவும் புனர்வாழ்வு அதிகார சபையின் மேலதிக பொது முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார். அன்னாரின் ஜனாஸா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது சமயத் தலைவர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், இறுதி மரியாதை செலுத்தினர். அல்ஹாஜ் ஜுனைதா ஷெரீப்பின் ஜனாசா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.