அதிகளவில் பயணிகளை ஏற்ற வேண்டாமென அறிவுறுத்தல்

ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து

by Staff Writer 03-10-2021 | 11:08 AM
Colombo (News 1st) ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை மறு அறிவித்தல் வரை பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பஸ்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். தனியாருக்கு சொந்தமான பஸ்கள் பயணிக்கும் அளவு ஒப்பீட்டளவில் குறைவாகவுள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, மேல் மாகாணத்தில் 6000 பஸ்கள் சேவையில் ஈடுபட வேண்டிய நிலையில், வெறுமனே 900 பஸ்களே நேற்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவித்தார். பெருந்தொற்று நிலைமையினால் வேறு தொழில்களை நாடிச்சென்றுள்ள பஸ் சாரதிகள் மீண்டும் தொழிலுக்கு திரும்பாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்ப்பார்த்திருந்த போதிலும் 1500 பஸ்களை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.