மண்சரிவு அபாய எச்சரிக்கை 12 மணி வரை அமுலில்

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 12 மணி வரை அமுலில் இருக்கும்

by Bella Dalima 02-10-2021 | 10:39 AM
Colombo (News 1st) பலத்த மழையுடன் கூடிய வானிலையால் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 12 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் நேற்று (01) மாலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காலி மாவட்டத்தின பத்தேகம, எல்பிட்டிய மற்றும் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, புலத்சிங்கள, அகலவத்த மற்றும் தொடங்கொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தின் பாத்தஹேவாஹெட்ட, தொலுவ மற்றும் கங்கவட்டகோரள ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தவிர கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, தெரணியகல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹவியகொட, அயகம, இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்தல் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.