இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளால் பலாலி மீனவர்களின் வலைகள் சேதம்

by Staff Writer 02-10-2021 | 7:54 PM
Colombo (News 1st) இந்திய மீனவர்கள் தமது வலைகளை சேதப்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாணம் - பலாலி வடக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பலாலி வடக்கிலிருந்து இரண்டு படகுகளில் நான்கு மீனவர்கள் நேற்று (01) கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். இந்த மீனவர்களின் பெறுமதியான வலைகளை இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் சேதப்படுத்தியுள்ளன. கடந்த மாதமும் இந்திய இழுவைப் படகுகளால் மீன்பிடி வலை சேதமடைந்த நிலையில், இந்த மீனவர்கள் புதிய வலையை அண்மையில் கொள்வனவு செய்துள்ளனர். அதனையும், மீள பயன்படுத்த முடியாத அளவிற்கு இந்திய இழுவைப் படகுகள் சேதப்படுத்தியுள்ளதால், மீனவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.