கிராம சேவகரின் கணவர் கொலை: மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேர்னலுக்கு விளக்கமறியல்

by Staff Writer 30-09-2021 | 8:32 PM
Colombo (News 1st) மட்டக்குளி கிராம சேவகரின் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேர்னல் சமந்த திலகரத்ன நாளை (01) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (30) அவரை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபரான லெப்டினன் கேர்னல் இந்தக் கொலையை செய்வித்தார் என்பதற்கான தகவல்கள் உறுதியாகியுள்ளதென மட்டக்குளி பொலிஸார் நீதிமன்றில் இன்று (30) தெரிவித்தனர். கொலை தொடர்பாக மட்டக்குளி இராணுவ முகாமில் மேலும் 13 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாலத்துறை - எல்லே விளையாட்டுக் கழகத்தின் தலைவராக செயற்பட்டுவந்த அகில சம்பத் ரத்னசிறி எனும் 36 வயதுடையவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இராணுவ முகாமுக்கு சொந்தமான கெப் வாகனத்தில் கடந்த 17 ஆம் திகதி குறித்த நபரை கடத்திச் சென்றுள்ளதுடன், கடந்த 20 ஆம் திகதி காக்கைதீவு கடற்கரையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கடத்திச்சென்று தாக்கிவிட்டு கழுத்தை நெரித்து பின்னர் சேதவத்த கறுப்பு பாலத்திலிருந்து களனி கங்கையில் உடலைப் போட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த நபரின் மனைவியின் தொடர்பின் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதென பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.