முதலீட்டு திட்டங்களுக்காக காணிகளை வழங்க அனுமதி

24 முதலீட்டு திட்டங்களுக்காக காணிகளை வழங்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 28-09-2021 | 3:59 PM
Colombo (News 1st) 10 பிராந்திய கைத்தொழில் பேட்டைகளில் 24 திட்டங்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அந்தக் காணிகளை 35 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (27) கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது, மேலும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நீரை தேக்கிவைக்கும் கொள்ளளவை அதிகரிப்பதற்காக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களில் திரண்டுள்ள மணல், மண் மற்றும் சேதனப் பொருட்களை தனியார் பிரிவு அகற்றுவதற்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்கீழ், அரசாங்கத்தின் செலவின்றி இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர், அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கமநலசேவை திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ், குளங்களில் திரண்டுள்ள மணல் மற்றும் மண் என்பன அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் அகற்றப்படும் பொருட்கள் மட்பாண்ட கைதொழில், மணல் அரித்தெடுத்தல், சேதன உர தயாரிப்பு மற்றும் வீதி அபிவிருத்தி என்பவற்றிற்காக வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. இதனிடையே, 1956 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல் சட்டத்தின் கீழ், உள்ள ஆபத்தான தொழில்கள் தொடர்பான கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், இதுவரை பட்டியலிடப்பட்டிருந்த 51 ஆபத்தான தொழில்களுக்கு மேலதிகமாக வீட்டுப் பணி, ஒப்பனை அலங்கார தொழில்கள் , கணினி மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்களுடான தொழில்கள் உள்ளிட்ட 20 தொழில்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.