யாழ். மருதனார்மடம் சந்தியில் வாள்வெட்டு தாக்குதல் : கைதான ஐவருக்கும் விளக்கமறியல்

by Staff Writer 27-09-2021 | 11:07 AM
Colombo (News 1st) மருதனார்மடம் சந்தியில் கடந்த முதலாம் திகதி பழக்கடை வியாபாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்தும் 04 பிள்ளைகளின் தந்தை ஒருவர் மீது கடந்த முதலாம் திகதி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்கள், மோட்டார்சைக்கிள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. சந்தேகநபர்கள் நேற்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 06 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை நாட்டிலிருந்து தப்பித்து, இந்தியாவுக்கு சென்ற சிலரே வழிநடத்துவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.