17,000 பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் 

17,000 பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன

by Staff Writer 26-09-2021 | 12:15 PM
Colombo (News 1st) கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ள 17,000 பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தற்போது இந்த நிவாரண வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இந்த நிவாரண திட்டத்தை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி நாடு திறக்கப்படுமானால், அதற்கு பின்னர் சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, போக்குவரத்து சேவையை மேற்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். சாரதிகளும் நடத்துநர்களும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருத்தல், பயணிகள் தடுப்பூசி ஏற்றியிருத்தல், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்தல் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கி புதிய போக்குவரத்து திட்டம் வகுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிரவரும் முதலாம் திகதி COVID செயலணி கூடுவதற்கு முன்னர் குறித்த திட்டத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்