தமிழ் தரப்பினரை ஒன்றிணையுமாறு TELO அழைப்பு

தமிழ் தரப்பினரை ஒன்றிணையுமாறு தமிழீழ விடுதலை இயக்கம் அழைப்பு

by Staff Writer 26-09-2021 | 3:00 PM
Colombo (News 1st) தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஒருமித்து ஐரோப்பிய பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவர ஒன்றிணையுமாறு தமிழ் தரப்பினருக்கு தமிழீழ விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் GSP+ வரிச்சலுகை சம்பந்தமான களநிலை ஆராய்வு மற்றும் கலந்துரையாடலுக்கு நாளை (27) இலங்கை வரவுள்ளமை உறுதியாகியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தோடு முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால், தமிழர் தரப்போடும் அவர்கள் கலந்துரையாடுவதற்கு ஆயத்தமாகி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையை இலங்கை அரசு நிராகரித்ததை அடுத்து, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் வரை GSP+ வரிச்சலுகையை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதை தடைசெய்வது குறித்து பரிசீலிக்க ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானித்ததாக சுரேந்திரன் குருசுவாமி கூறியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது பல்லாண்டு காலம் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளான காணி அபகரிப்பு, குடியேற்றம் மற்றும் இராணுவ மயமாக்கல் ஆகிய விடயங்களையும் ஒருமித்து ஐரோப்பிய பிரநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவர ஒன்றிணையுமாறு சுரேந்திரன் குருசுவாமி அனைத்து தமிழ் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏனைய செய்திகள்