பேசாலையில் கடற்படை உறுப்பினர்களுக்கும் மீனவர்களுக்கும் இடையே கைகலப்பு

by Bella Dalima 25-09-2021 | 7:23 PM
Colombo (News 1st) மன்னார் - பேசாலையில் சோதனை நடவடிக்கைக்கு சிவில் உடையில் சென்ற கடற்படை உறுப்பினர்களுக்கும் மீனவர்களுக்கும் இடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேசாலைக்கு சிவில் உடையில் சென்றவர்கள் தம்மை தாக்கியதாக மீனவர்கள் கூறினர். நேற்றிரவு கடலுக்கு சென்று கரைக்கு திரும்பியபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் ஒரு கடற்படை உறுப்பினரும் அடங்குகின்றார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வௌியேறியுள்ளனர். இதனிடையே, மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் இன்று முற்பகல் பேசாலை பகுதிக்கு சென்றிருந்தனர். நேற்றிரவு 12.30 அளவில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு தரப்பினரும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.