திறப்பனையில் கட்டுத்துவக்கு வெடித்து இருவர் பலி; ஒருவர் கைது

by Bella Dalima 24-09-2021 | 10:48 AM
Colombo (News 1st) அநுராதபுரம் - திறப்பனை, முல்கிரியாகல்ல வாவித் திடலில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வசமிருந்த சந்தேகத்திற்கிடமான சில உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். திறப்பனை வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் நேற்றிரவு 44 மற்றும் 60 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்போது மற்றுமொருவர் காயமடைந்ததாக பொலிஸார் கூறினர். வாவியில் நீர் பருக வரும் மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் இந்த கட்டுத்துவக்கு பொருத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. வேட்டைக்காரர்களின் இலக்கு தவறியதில் இருவர் பலியாகியுள்ளனர். இந்த கட்டுத்துவக்கை பொருத்திய வேட்டைக்காரரே நேற்றிரவு பெரிய மீயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கவனயீனமான செயற்பட்ட காரணமாக இடம்பெற்ற கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணையும் பிரேத பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.