HIV/எயிட்ஸ் தொற்றுக்குள்ளானோருக்கான அறிவுறுத்தல்

HIV/எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் விரைவில் COVID தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 23-09-2021 | 10:34 AM
Colombo (News 1st) 20 தொடக்கம் 29 வயதிற்கு இடைப்பட்டவர்களில் 1.04 மில்லியன் பேருக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர், மருத்துவர் ரஞ்சித் படுவன்துடாவ குறிப்பிட்டார். இதனை தவிர தென் மாகாணத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இளைஞர், யுவதிகள் தங்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக அவர் கூறினார். இளைஞர், யுவதிகளுக்கு தேவையான அளவு தடுப்பூசிகள் மாவட்ட ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, HIV தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோருக்கும் COVID தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பாலியல் நோய் தடுப்பிற்கான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட குறிப்பிட்டார். HIV நோயாளர்களுக்கு COVID-19 தொற்று ஏற்படுமாயின், சிக்கலான நிலை ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்தார். எனவே, HIV/எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தங்களின் பகுதிகளில் தடுப்பூசி ஏற்றப்படும் நிலையங்களுக்கு சென்று, தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு முன்னர், மருத்துவ ஆலோசனைகளை இவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அஜித் கரவிட்ட வலியுறுத்தினார். எவ்வாறாயினும், கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவதால் பாலியல்சார் தொற்றுநோய்க்குள்ளாகியவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என அவர் கூறினார். கொரோனா நோயாளர்களுக்கு வீடுகளில் சிகிச்சை வழங்கும் திட்டத்தினூடாக எவ்வித அறிவிப்புகளும் இன்றி, வீடுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் அபாய நிலையை எதிர்நோக்கக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 60 வயதிற்கும் குறைந்த, ஏனைய நோய்களால் பாதிக்கப்படாத, கொரோனா தொற்றுக்கான சாதாரண அறிகுறிகளுடன் உள்ளவர்கள் மாத்திரமே சுகாதார அதிகாரிகள், வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் வீடுகளில் சிகிச்சை பெற முடியும். ஏனைய கொரோனா நோயாளர்கள் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொண்டு, வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது கட்டாயமானது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.