கைதான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 23-09-2021 | 7:03 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நல்லூரில் உள்ள திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடடத்தில் கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கு முயன்றபோது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். நினைவிடத்திற்கு அருகே கற்பூரம் ஏற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலர் முயன்ற போது பொலிஸார் அதற்கு அனுமதி மறுத்திருந்தனர். எனினும், பொலிஸாரின் தடையை மீறி அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார். எவ்வாறாயினும், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரும் இன்று மாலை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.