இலங்கையின் எரிசக்தி கட்டுப்பாடு வௌிநாட்டு வசமாகும்

இலங்கையின் எரிசக்தி கட்டுப்பாடு வௌிநாட்டு நிறுவனத்தின் வசமாகும்: சஜித் பிரேமதாச எச்சரிக்கை

by Staff Writer 23-09-2021 | 7:56 PM
Colombo (News 1st) கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை வௌிநாட்டிற்கு வழங்குவதால், சிறு நாடான இலங்கையின் எரிசக்தி கட்டுப்பாடு வௌிநாட்டு நிறுவனத்தின் வசமாகும் ஆபத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். உலகின் வேறு எந்தவொரு நாடும் இயற்கை வாயு விநியோக விலைமனு மற்றும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியை ஒன்றிணைப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அத்தகைய நடைமுறையை பின்பற்றினால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மாத்திரம் அல்லாது, நாட்டையே தன்வசப்படுத்துவதற்கான இயலுமை அந்நிறுவனத்திற்கு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டு முழுமையாக மின்சார சபைக்கு சொந்தமாகவுள்ள யுக தனவி மின் உற்பத்தி நிலையத்தை உரிய விலை மனு நடைமுறைக்கு மாறாக, Zoom ஊடாக நள்ளிரவு வேளையில் அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திடம் கையளிக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரை அமைச்சரவை மௌனம் காத்ததற்கான காரணம் என்னவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சரவை மௌனம் காத்த குற்றத்திலிருந்து விடுபட முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.