by Staff Writer 23-09-2021 | 1:16 PM
Colombo (News 1st) நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டிக்குள் இருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு கைக்குண்டுகளை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் அவை கையளிக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு மேலதிக நீதவான் சம்பிக்க ராஜபக்ஸ பிறப்பித்த உத்தரவிற்கு அமையவே அவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.
கடந்த 20 ஆம் திகதியில் இருந்து நேற்று (22) வரை நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சேர்ந்த குப்பைகளை அகற்றுவதற்கு முயன்றபோது, நீர்கொழும்பு நகர சபையின் ஊழியர் ஒருவர் இந்த கைக்குண்டுகளை அவதானித்திருந்தார்.
குண்டுகளை குப்பைத் தொட்டியில் போட்டவர்களை கண்டறிவதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.