வீடுகளில் சிகிச்சை பெறும் எவரும் உயிரிழக்கவில்லை

வீடுகளில் சிகிச்சை பெறும் முறைமையின் கீழ் எவரும் உயிரிழக்கவில்லை: சுகாதார மேம்பாட்டு அலுவலக பணிப்பாளர்

by Bella Dalima 22-09-2021 | 10:51 AM
Colombo (News 1st) நாட்டில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜன் அளவு வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளர்களுக்கு போதுமானதாகவுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்தது. வீடுகளில் சிகிச்சை பெறும் முறைமையின் கீழ் எந்தவொரு நோயாளரும் உயிரிழக்கவில்லையென சுகாதார மேம்பாட்டு அலுவலக பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார். இதனிடையே, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12,284 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 66 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இவை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டவையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 36 பெண்களும் 30 ஆண்களும் அடங்குகின்றனர். இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளான 1,321 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் பதிவான COVID நோயாளர்களின் எண்ணிக்கை 5,07,330 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, COVID நோயாளர்கள் 1,047 பேர் நேற்று குணமடைந்ததுடன், COVID தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எணணிக்கை 4,34,140 ஆக அதிகரித்துள்ளது.