யுகதனவி மின் உற்பத்தி நிலைய பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை

by Bella Dalima 22-09-2021 | 8:59 PM
Colombo (News 1st) கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்துடன் கையொப்பமிட்டதாக அமெரிக்காவின் New Fortress நிறுவனம் இன்று அறிவித்தது. கொழும்பு துறைமுகத்திற்கு அப்பாலுள்ள கடலில் இயற்கை திரவ வாயு முனையம் ஒன்றை நிர்மாணித்தல், கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் வரை குழாய் கட்டமைப்பை அமைத்தல் ஆகியன ஒப்பந்தத்தில் அடங்குவதாக அமெரிக்க நிறுவனம் இன்று பகிரங்கப்படுத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் ஏற்கனவே 310 மெகாவாட் கொள்ளளவை கொண்டிருப்பதுடன், 2023 ஆம் ஆண்டளவில் மேலதிகமாக 700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.   இந்த விடயம் தொடர்பில் மின்சக்தி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என நம்புவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். திறைசேரி தகவல்களுக்கு அமைய, கால எல்லையுடனான உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என அறியக்கிடைத்ததாகவும் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தௌிவூட்டப்படும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.