ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ லாட்வியா ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

by Bella Dalima 22-09-2021 | 12:49 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் லாட்வியா ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் (Egils Levits) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (21) இடம்பெற்றது. இந்த அரச தலைவர்களின் இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான 25 வருட உறவினை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. COVID தொற்று காரணமாக பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் இரு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளதுடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. கல்வி , டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்துறைகளில் இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் ஆசிய, தென் ஆபிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் அதிகளவான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இரு அரச தலைவர்களும் இதன்போது கருத்து பரிமாறியுள்ளனர்.