கொத்மலை பொலிஸ் அதிகாரி காணாமல் போய் இன்றுடன் 14 நாட்கள் - விசாரணை தொடர்கின்றது

by Staff Writer 21-09-2021 | 9:08 PM
Colombo (News 1st) கொத்மலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் காணாமல் போய் இன்றுடன் 14 நாட்கள் கடந்துள்ளன. பொலிஸாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று (21) காலை முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான எஸ். ஜெகதிஸ்வரன் மற்றும் காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்கள் கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமும் கலந்துரையாடினர். பூண்டுலோயாவைச் சேர்ந்த S. இளங்கோவன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர், சுகயீனம் காரணமாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 8 ஆம் திகதி முதல் காணாமற்போயுள்ளார். 55 வயதான பொலிஸ் உத்தியோகத்தர், கடந்த 31 வருடங்களாக பணிபுரிந்து வருவதுடன் இறுதியாக கொத்மலை பொலிஸ் நிலையத்திலேயே பணிபுரிந்துள்ளார். ஏற்கனவே, கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 8ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் அவர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்