பயண கட்டுப்பாட்டை தளர்த்தியது அமெரிக்கா 

இரு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கு அமெரிக்கா செல்ல அனுமதி 

by Staff Writer 21-09-2021 | 10:40 AM
Colombo (News 1st) வெளிநாட்டுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. எனினும், கொரோனா தொற்றினை கருத்திற்கொண்டு சில நாடுகளுக்கு மாத்திரமே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு எதிர்வரும் நவம்பர் முதல் கட்டுப்பாடுகள் இன்றி வருகைதர முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகையின் கொவிட் 19 நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியன்ட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு, கொரோனா தொற்று இல்லை என இருந்தால் தடையின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப் பயணத்திற்கு முன்னதாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதற்கான அட்டையை வழங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணிகளின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியனவற்றை சேகரித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் 30 நாட்கள் வரை அமெரிக்க விமானத்தில் பயணித்த பயணிகளைக் கண்காணிக்குமாறு அமெரிக்காவின் தொற்றுநோய் பரவல் தடுப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கும் பிரித்தானியா, அயர்லாந்து, சீனா, இந்தியா, தென்னபிரிக்கா, ஈரான், பிரேஸில் ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த சூழலில் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.