பிரதமர் நாடு திரும்பினார்

இத்தாலி சென்றிருந்த பிரதமர் உள்ளிட்ட குழு நாடு திரும்பியது

by Staff Writer 20-09-2021 | 10:21 AM
Colombo (News 1st) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் இன்று (20) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். ஶ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான UL309 விமானத்தில் அவர்கள் நாட்டை வந்தடைந்தனர். இத்தாலியின் பொலொக்ஞா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜீ20 சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதாக, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கடந்த 10 ஆம் திகதி இத்தாலிக்கு சென்றனர். மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகள் என்பன இந்த விஜயத்தின் போது இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இத்தாலியில் வாழும் இலங்கையர்களை இதன்போது சந்தித்தமை விசேட அம்சமாகும். 20 வருட சேவையை நிறைவு செய்த பின்னர் இத்தாலி அரசாங்கத்தினால் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவை நாடு திரும்பிய பின்னரும் பெற்றுக் கொடுப்பதற்கான இயலுமை குறித்து இத்தாலி அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு பிரதமரால் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.