கடல் மார்க்க மஞ்சள் வர்த்தகம் முறியடிப்பு 

கடல் மார்க்க மஞ்சள் வர்த்தகம் முறியடிப்பு 

by Staff Writer 19-09-2021 | 3:56 PM
Colombo (News 1st) நாட்டிற்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கொண்டுவர முயற்சித்த ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் - சௌத்பார், எருக்கலம்பிட்டி கடற்பிரதேசங்களிலும் மன்னாரின் தென் கடற்பிராந்தியத்திலும் கடந்த 03 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் 3,704 கிலோகிராமுக்கும் அதிக உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களில் இலங்கைப் பிரஜைகள் நால்வரும் இந்திய பிரஜைகள் 06 பேரும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது. மன்னாரின் தென் கடற்பிராந்தியத்தில் நேற்று (18) மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சர்வதேச கடல் எல்லையை மீறி உட்பிரவேசித்த சந்தேகத்திற்கிடமான இந்திய டவ் படகொன்று இனங்காணப்பட்டுள்ளது. குறித்த படகிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கப்பட்ட 2,100 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. படகில் பயணித்த 06 இந்திய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, மன்னார் - சௌத்பார் களப்பு பகுதியில் நேற்று முன்தினம் கரையை நோக்கி வந்துகொண்டிருந்த டிங்கிப்படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது 20 பைகளில் பொதியிடப்பட்டிருந்த 866 கிலோ 200 கிராம் உலர்ந்த மஞ்சளுடன் இலங்கை பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் மன்னாரைச் சேர்ந்த 18 தொடக்கம் 48 வயதுக்கிடைப்பட்டவர்கள் என கடற்படை கூறியுள்ளது. இதேவேளை, எருக்கலம்பிட்டி களப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 738 கிலோ 700 கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.