சீனாவிற்கு பதிலடி: விசேட பாதுகாப்பு உடன்படிக்கை

சீனாவிற்கு பதிலடி வழங்க விசேட பாதுகாப்பு உடன்படிக்கை: 3 நாடுகள் இணைவு

by Staff Writer 16-09-2021 | 8:34 PM
Colombo (News 1st) சீனாவின் செயற்பாடுகளுக்கு பதிலடி வழங்குவதற்கான விசேட பாதுகாப்பு உடன்படிக்கையொன்றை பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியன அறிவித்துள்ளன. Aukus என அழைக்கப்படும் இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கையை ஸ்தாபிப்பது தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ​போரிஸ் ஜான்ஸன் மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் ஆகியோர் கூட்டறிக்கையொன்றை வௌியிட்டுள்ளனர். நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்வதற்காக இந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம் அணு ஆற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிப்பதற்கான வாய்ப்பு முதற்தடவையாக அவுஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ளது. அத்துடன், புலனாய்வு, தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் Cyber விடயங்களையும் இந்த பாதுகாப்பு உடன்படிக்கை உள்ளடக்கியுள்ளது. இந்தோ பசுபிக் வலயத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் மற்றும் இராணுவ பிரசன்னம் குறித்து இந்த மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த Aukus உடன்படிக்கையின் விளைவாக, பிரான்ஸ் வடிவமைக்கின்ற நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிப்பதற்கான உடன்படிக்கையை அவுஸ்திரேலியா இரத்து செய்துள்ளது. அவுஸ்திரேலிய கடற்படைக்காக 12 நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிப்பதற்காக 50 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான உடன்படிக்கையொன்று 2016 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அவுஸ்திரேலியாவினால் இதுவரை ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய பாதுகாப்பு உடன்படிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் தயாரிப்பில், உள்ளூர் வளங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற அவுஸ்திரேலியாவின் கோரிக்கையினால் ஏற்பட்ட தாமதங்களால், குறித்த உடன்படிக்கை பின்னடைவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.