by Staff Writer 16-09-2021 | 6:30 PM
Colombo (News 1st) லொஹான் ரத்வத்தே சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளை மிரட்டியமை மிக தண்டனைக்குரியது என்பதுடன், சட்டவாட்சிக்கு அச்சுறுத்தலானதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனூடாக அவர் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருக்கான நம்பிக்கையை இழந்துள்ளதுடன், பாராளுமன்றத்தில் எந்தவொரு தலைமை பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் தகுதியையும் இழந்திருப்பதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டியவை என்பதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்ற தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகள் விரைவாக நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளது.
லொஹான் ரத்வத்தே இராஜினாமா தீர்மானத்தினால் தனது நடத்தைக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வகிப்பதற்கான உரிமையையும் இழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.