விநியோகிக்கும் சீனியின் அளவை அதிகரித்தது சதொச

ஒருவருக்கு ஒரு தடவையில் விநியோகிக்கும் சீனியின் அளவை அதிகரித்தது லங்கா சதொச

by Staff Writer 15-09-2021 | 10:36 AM
Colombo (News 1st) லங்கா சதொச ஊடாக ஒருவருக்கு ஒரு தடவையில் விநியோகிக்கக்கூடிய சீனியின் அளவு 05 கிலோ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஒருவருக்கு அதிகபட்சம் 3 கிலோ சீனி மாத்திரமே விநியோகிக்கப்பட்டதாக லங்கா சதொசவின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் கூறினார். சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி ஒரு தடவையில் 05 நபர்களுக்கு மாத்திரம் பொருள் கொள்வனவிற்கு அனுமதி வழங்கப்படுவதாலேயே, சீனியை கொள்வனவு செய்ய செல்வோர் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, தேவையான அளவு சீனி நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் செனரத் நிவுன்ஹல்ல தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு நுகர்விற்கு தேவையான அளவு சீனி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், தூர பிரதேசங்களிலுள்ள சில வியாபார நிலையங்களுக்கு சீனியை பகிர்ந்தளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் செனரத் நிவுன்ஹல்ல குறிப்பிட்டார்.