by Staff Writer 15-09-2021 | 1:24 PM
Colombo (News 1st) கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரை கைது செய்து வழக்கு தாக்கல் செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இராஜாங்க அமைச்சரை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்குமாறு கூட்டமைப்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை தம்மால் உறுதிப்படுத்த முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர், தமிழ் கைதிகள் இருவரை முழந்தாளிட செய்துள்ளதாக முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வினவுவதற்காக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தோம்.
எனினும், அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.