கொழும்பு துறைமுகக் காணி விற்பனையை நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

by Bella Dalima 14-09-2021 | 8:50 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியை சீன நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தேசிய வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பை மின்சக்தி, பெட்ரோலிய, துறைமுகங்கள் தொழிற்சங்கங்கள் இன்று கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது, இலங்கை மின்சார சபை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்ததாவது,
நிலைமை மிகவும் பாரதூரமானது. கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி, அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களுக்கு கூட முன்கூட்டியே தெரிவிக்காமல், செயலாளர் ஊடாக அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்தார். அமைச்சர்களை பொம்மைகளாக மாற்றி தற்போது அமைச்சரவை பத்திரங்களுக்கு அனுமதி பெறப்படுகின்றன. மின்சார உற்பத்திக்கான LNG Gas ஏகபோக உரிமை அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மறுபுரம் கெரவலப்பிட்டிய துறைமுகம் அமெரிக்காவிற்கு விற்கப்பட்டுள்ளது. கெரவலப்பிட்டியவை முதலில் கொடுத்து பார்க்கின்றனர். தற்போது 13 ஏக்கர் காணியை வழங்கினால் துறைமுக ஊழியர்கள் எவ்வாறு செயற்படுவார்கள் என்பதை பார்க்க முயற்சிக்கின்றனர்.