நைஜீரிய சிறை தகர்ப்பு: 240 கைதிகள் தப்பியோட்டம்

அடையாளம் தெரியாதோரால் நைஜீரிய சிறை தகர்ப்பு: 240 கைதிகள் தப்பியோட்டம்

by Bella Dalima 14-09-2021 | 12:57 PM
Colombo (News 1st) நைஜீரியாவின் கோகி (Kogi) மாகாணத்தின் கெப்பா (Kabba) பகுதியில் உள்ள சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கிருந்த 240 கைதிகளை தப்பிக்க வைத்துள்ளனர். இரவில் கெப்பா சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தும் துப்பாக்கிச்சூடு நடத்தியும் 240 கைதிகளை தப்பிக்க வைத்திருக்கிறார்கள். இது குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராஃப் அரெக்பசுலோ,
தப்பி ஓடிய குற்றவாளிகளை பற்றிய தகவல்களை இண்டர்போல் அமைப்பிடம் சமர்ப்பித்திருக்கிறோம். ஒருவேளை நாட்டை விட்டு அவர்கள் வெளியேறினாலும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. கெப்பா சிறைச்சாலையில் இருந்த 294 கைதிகளில் 224 விசாரணைக் கைதிகளும் 70 குற்றவாளிகளும் இருந்தனர்
என தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டு பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி, இரண்டு காவலாளிகளையும் கொன்ற தீவிரவாதிகளை உடனடியாக கைது செய்வோம் என்றும் அவர் உறுதி அளித்திருக்கிறார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் இமொ மாகாணத்தில் இருக்கும் சிறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி 1,800 கைதிகளை தப்ப வைத்தமை குறிப்பிடத்தக்கது.