ஒற்றுமையிலும் சகவாழ்விலுமே தேசத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது: G20 சர்வமத மாநாட்டில் பிரதமர் உரை

by Staff Writer 13-09-2021 | 11:19 AM
Colombo (News 1st) ஒரு தேசத்தின் ஒற்றுமையிலும் சகவாழ்விலுமே எதிர்காலம் தங்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இத்தாலியின் Bologna நகரில் நடைபெறும் G20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினமான நேற்று (12) உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது, பெரும்பாலும் ஒரு தேசத்தின் எதிர்காலம் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். 'கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களிடையே புரிதல்' எனும் தொனிப்பொருளில் நடைபெறும் G20 சர்வமத மாநாட்டில் உரையாற்ற கிடைத்தமை குறித்து பிரதமர் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளார். மாநாட்டின் தொனிப்பொருள் இலங்கைக்கும் தெற்காசியாவின் புவியியல் வலயத்திற்கும் பொருத்தமானதாக காணப்படுவதால், இதனை வரவேற்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இன, மத மற்றும் கலாசார பன்முகத்தன்மை என்பன பிராந்தியத்தின் முக்கிய அம்சங்களாகும் என சுட்டிக்காட்டிய பிரதமர், G20 நாடுகளில் பல்வேறு இன, மத மற்றும் கலாசார பின்னணிகளைக் கொண்ட மக்கள் வசிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் என்பன யுகத்தின் மிக முக்கியமான சவால்கள் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.