by Staff Writer 13-09-2021 | 11:43 AM
Colombo (News 1st) சில பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் தொடர்பில் உயிர் மாதிரி ஆய்வுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகளை தயார்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் COVID-19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் தொடர்பில் கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உயிர் மாதிரிகளின் ஆய்வுகளை மேம்படுத்துவதனூடாக கொரோனா நோயாளர்களை மாத்திரமன்றி, ஏனைய நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாவோர் தொடர்பிலும் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது வேகமாக பரவிவரும் டெல்டா பிறழ்வு உள்ளிட்ட அதிதீவிரமான கொரோனா வைரஸ் பிறழ்வுகள் தொடர்பில் கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் அண்மையில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.