G20 சர்வமத மாநாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உரை

by Bella Dalima 12-09-2021 | 8:53 PM
Colombo (News 1st) இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ G20 நாடுகளின் சர்வமத மாநாட்டில் இன்றிரவு உரையாற்றவுள்ளார். குணமடைவதற்கான தருணம், கலாசாரங்களுக்கு இடையில் ஒற்றுமை, மதங்களுக்கு இடையில் புரிந்துணர்வு எனும் தொனிப்பொருளில் G20 சர்வமத மாநாடு இம்முறை நடைபெறுகின்றது. இந்த மாநாடு முதன்முறையாக 2014 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றதுடன், இம்முறை இத்தாலியின் Bologna பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்றது. 2014 ஆம் ஆண்டு முதல் G20 மாநாட்டை நடத்தும் நாடுகளே இந்த மாநாட்டையும் நடத்தி வருகின்றன. இம்முறை மாநாட்டில் மத மற்றும் கலாசார அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், நிபுணர்கள், அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான நிறுவன பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். பொருளாதார மாதிரி, சுற்றாடல், பெண்கள், பிள்ளைகள், தொழில், மனிதாபிமான உதவி, சுகாதாரம், கல்வி, மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம், பூகோள பாதுகாப்பு, ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்குகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இத்தாலியின் Bologna பல்கலைக்கழகத்தில் இன்று ஆரம்பமாகும் மாநாட்டின் பிரதான உரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிகழ்த்துகின்றார். வறுமை மற்றும் அறியாமை மேலாங்கிய இடத்தில் அடிப்படைவாத துன்புறுத்தல்கள் மிக இலகுவாக வேரூன்றும் என பரிசுத்த பாப்பரசர் இந்த மாநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் விட கல்விக்கு முக்கியத்துவமளிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் பரிசுத்த பாப்பரசர் வலியுறுத்தியுள்ளார்.