செப்டம்பர்11 தாக்குதல்: FBIஆல் புதிய ஆவணம் வௌியீடு

செப்டம்பர் 11 தாக்குதலில் சவுதிக்குள்ள தொடர்பு: FBI-ஆல் புதிய அறிக்கை வௌியீடு

by Bella Dalima 12-09-2021 | 5:35 PM
Colombo (News 1st) செப்டம்பர் 11 தாக்குதலுடன் சவுதி பிரஜைகளுக்குள்ள தொடர்பு குறித்து புதிய, வகைப்படுத்தப்பட்ட அறிக்கையொன்றை FBI எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு வௌியிட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சவுதி அரேபியா முன்கூட்டியே அறிந்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன், இதன் உண்மைத்தன்மையை உலகிற்கு வௌிப்படுத்தும் வகையில், 2001 செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான ஆவணங்களை வௌியிட வேண்டுமெனவும் அவர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த தாக்குதலுடன் சவுதி அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லையென குறித்த ஆவணம் வௌிக்கொணர்ந்துள்ளது. இந்த நிலையில், வகைப்படுத்தப்பட்ட இந்த அறிக்கையை வாஷிங்டனிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் வரவேற்றுள்ளது. எனினும், விமானத்தை கடத்தியவர்களுக்கும் சவுதி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் ஆதாரமற்றவை எனவும் வாஷிங்டனிலுள்ள சவுதி அரேபிய தூதரகம் கூறியுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதலுக்காக விமானத்தைக் கடத்திய 19 பேரில் 15 பேர் சவுதி அரேபிய பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிக பயங்கரமான செப்டம்பர் 11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நினைவு தினத்தில் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. மேலும் வௌியிடப்படுமென எதிர்பார்க்கப்படும் ஏராளமான அறிக்கைகளில் இது முதலாவது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.