கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அனுமதி

by Bella Dalima 12-09-2021 | 2:45 PM
Colombo (News 1st) அமைச்சரவையின் வாய்மொழி மூல இணக்கப்பாட்டின் அடிப்படையில், கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியையோ, வாயு விநியோகக் கட்டமைப்பையோ அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்ல அலுவலகத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த திங்கட்கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பத்திரத்தில் குறிப்பிடாது, இறுதி தருணத்தில் வாய்மொழி மூலம் கூறி குறித்த திட்டதிற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அதற்கமைய, கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பகுதியையும் வாயு விநியோகிப்பதற்கான கட்டமைப்பையும் வாயு களஞ்சியசாலையையும் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், அவற்றை வழங்குவதற்கான நிபந்தனைகளை தயாரித்தல், விற்பனைக்கான விலைகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்திற்குமான அதிகாரத்தை நிதி அமைச்சின் செயலாளருக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.