யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு ஒத்திவைப்பு

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு ஒத்திவைப்பு

by Staff Writer 08-09-2021 | 3:59 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அடுத்த மாதம் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் கட்ட நடவடிக்கையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். மேலும் பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலைக்கு மாற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதியை இம் மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்குழு இன்று (08)  காலை துணைவேந்தர், பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் கூடியது. இதன்போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.