முள்ளிவாய்க்காலை சேர்ந்த பெண் இராமேஸ்வரத்தில் கைது

முள்ளிவாய்க்காலை சேர்ந்த பெண் இராமேஸ்வரத்தில் கைது

by Staff Writer 06-09-2021 | 4:17 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக இலங்கை வர முயன்ற பெண் ஒருவர் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு பயணிக்க முயன்றபோது, கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார். சென்னை - வேளச்சேரியில் தங்கியிருந்த குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கை பெண் இராமேஸ்வரம் கரையோர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமானம் மூலமாக சென்னைக்கு சென்று , மூன்று ஆண்டுகளாக இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. படகு மூலம் நாடு திரும்பும் நோக்கில், தரகர் ஒருவரின் உதவியுடன் குறித்த பெண் இராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை அருகே உள்ள மணல்திட்டு பகுதிக்கு வந்துள்ளார். இலங்கை படகிற்காக காத்திருந்த போதும், படகு வராத நிலையில், பல மணி நேரம் அவர் நிக்கதியாகியிருப்பதை அவதானித்த தமிழக மீனவர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, கரையோர பொலிஸார் மீனவர்களின் படகில் சென்று குறித்த பெண்னை இராமேஷ்வரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணைகளை நடத்தி வருவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.