6 மாதங்களின் பின்னர் முதலாவது கொரோனா மரணம்

நியூசிலாந்தில் 6 மாதங்களின் பின்னர் முதலாவது கொரோனா மரணம் பதிவு

by Bella Dalima 04-09-2021 | 12:54 PM
Colombo (News 1st) நியூசிலாந்தில் 6 மாதங்களின் பின்னர் முதலாவது கொரோனா மரணம் இன்று பதிவாகியுள்ளது. எனினும், மிகத் தீவிரமாக பரவலடையும் டெல்டா பிறழ்வு தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் சமிக்ஞைகள் தென்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை மோசமடைந்த 90 வயதான பெண் ஒருவர், செயற்கை சுவாசக்கருவியின் உதவியையோ, தீவிர சிகிச்சையையோ பெறாத நிலையில், ஒக்லாண்டிலுள்ள வைத்தியசாலையொன்றில் உயிரிழந்துள்ளார். நியூஸிலாந்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 27 ஆவது நபராகவும், இவ்வாண்டு பெப்ரவரி 16 ஆம் திகதியின் பின்னர் உயிரிழந்த முதலாவது நபராகவும் இவர் பதிவாகியுள்ளார். ஒக்லாண்டில் முன்னரே கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் காணப்பட்ட தொடர்பினால் இவருக்கு தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6 மாதங்களின் பின்னர் கடந்த மாத நடுப்பகுதியில் அடையாளங்காணப்பட்ட, கொரோனாவின் உள்ளூர் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நியூஸிலாந்து போராடி வருகின்றது. அந்த தொற்றாளர் அடையாளங்காணப்பட்டதன் பின்னர் 782 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒக்லாண்ட் நகரில் அடையாளங்காணப்பட்டவர்களாவர். இந்த நிலையில், குறித்த நகரில் மிகவும் இறுக்கமான COVID கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. நாட்டின் ஏனைய பகுதிகளில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் 20 பேருக்கு மாத்திரமே அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அலையில் கடந்த வார இறுதியில் 84 பேருக்கு உச்சபட்சமாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இவ்வார இறுதியில் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.